Saturday, August 27, 2016

கிருஷ்ண ஜெயந்தி - துவரிமான்


                                           कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
                                          मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ||

"கன்னலில் லட்டு அவற்றோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்திலிட்டு"

"அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டுவைத்தேன்"

"செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால் பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்"

"கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து நல்லன நாவற் பழங்கள் கொண்டு"

"ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த. இருகாலும் கொண்டு, அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினைப் பட நடந்து"
                                                                                                                                                                                 (பெரியாழ்வார்  திருமொழி) 

                            இந்த பிரசாத விஷயத்தில் கூட பாண்டி நாட்டு ஆழ்வார்களை (!) மிஞ்சமுடியாது. கண்ணனுக்குப் பார்த்துப் பார்த்து என்ன கொடுக்க வேண்டும் என்று தாயுள்ளத்தோடு பொங்கும் பரிவாலே பாடியிருக்கிறார் பெரியாழ்வார். இன்றும் நம் இல்லங்களில் செய்யும் பக்ஷணங்கள் முதல் வீட்டில் கிருஷ்ண பாதம் வரைவது வரை எல்லாம் ஆழ்வார் பாடியதிலிருந்து தான் வந்திருக்கும்.
                                              கண்ணன் சொன்னது போல் அலுவலகக் கடமையை மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டியதாகிவிடுகிறது பல நேரங்களில். இந்த வருஷம்  கிருஷ்ண ஜெயந்தியும் அப்படித்தான் போனது. நமக்கு சொந்த வேல இருப்பது கிளைண்ட்க்குக்கோ, சேல்ஸ், ப்ரீ-சேல்ஸ் டீமுக்கு எல்லாம் எப்படி தெரியும்ன்னு தெரியல. ஆவணி அவிட்டம் தொடங்கிய உடனே 'வி நீட் திஸ் ப்ரோபோசல் பை ஈவினிங்' என்று ஒரு மெயில். நாம அனுப்பினா உடனே அதை ஏற்றுக்கொண்டால் அவர்கள் கௌரவம் சற்று இளைப்பாறும். அதனால 4-5 ரெவ்யு மீட்டிங் (review meeting). அப்பறம் இன்னொரு இஸ்யு (issue) டெலிவரி பக்கம்.. நம்ப ஆஃஷோர் (offshore) பசங்கள வச்சு வேல பாக்கறது வைகைல எதிர் நீச்சல் போடுற மாதிரி - ஒன்னு தண்ணீர் இருக்காது, இல்லை வெள்ளம் வரும், அதும் இல்லைன்னா முட்டி அளவு தான் தண்ணி இருக்கும். பண்ணின தப்பையே 10 நாள் கழிச்சு தான் சொல்லுவான். அப்பறம் கிளைண்ட் முன்னாடி நாம தான் வாய்தா வாங்கணும். அவன் எவ்வளவு அடிச்சாலும் வலிச்ச மாதிரியே காட்டிண்டு வேலை பாக்கணும். அதே வேலைல 4-5 நாள் போக கிருஷ்ணன் பிறப்பும் வந்தது. அப்பவும் சொல்லிவச்ச மாதிரி ஒரு மெயில் 'வி நீட் திஸ் ப்ரோபோசல் asap அண்ட் லோட் தி ரிசோர்ஸஸ் பை டுமாரோ'.. அதாவது வேலை பார்க்க ஒருவித ஒப்பந்தம் தயார் செய்வதோடு, அதற்க்கு ஆட்களும் நாளை முதல் வேணும் என்பது தான் அது.பார்த்ததும் பலமான சிரிப்பு தான் வந்தது. சமைக்கறவனுக்குத்தான் தெரியும் கைவசம் சரக்கு இருக்கா இல்லையான்னு.

                                              இருக்கற பிரச்சனை பத்தாது இதுவேறயான்னு ஒரு எண்ணத்தோட டெலிவரி, ஆடிட் என மேலும்  பலவித பிரச்சனைகளையும் கையாளவேண்டியதானது. கிருஷ்ண பிறப்பிற்கு ஊருக்குப் போகலாம் என்ற எண்ணத்தையே மாற்றவேண்டியதானது. சரி, ஆத்திலாவது அதைக் கொண்டாடலாம்ன்னு பார்த்தா அதுக்கும் வழி இல்லாம போனது. ஒருத்தி மகனாய் கிருஷ்ணன் ஓரிரவில் பிறந்து ஒளித்து வளரும் போது தான் வீடு வர முடிந்தது. (அதாவது 4-5 சாமம் கடந்து). இந்தமுறை கிருஷ்ண பிறப்பிற்கு துவரிமான் போய் தேர் சேவித்துவிட்டு வரலாம்ன்னு ஒரு எண்ணம். அது நிறைவேறாததால், ஸுந்தரிடம் போட்டோவாவது முகநூல் மூலம் அனுப்பு என்றேன். இப்போதைக்கு அது தான் ஒரே வழி. பல திவ்ய தேச உற்ஸவங்களையும் அதுலயே சேவிக்கும்படி ஏற்பாடாகிறது. (பலரின் செல்பிகளோடு :( )

                                               துவரிமான் - மதுரை அருகே 1 காத தூரம் (6-7 கி.மீ) இருக்கும் ஒரு வைகை கரைக் கிராமம். திருமால் மச்சாவதாரம் செய்த கிருதுமால் நதி உற்பத்தியாகும்  இடம். ஸ்ரீரங்கம் மாதிரியே இந்த ஊரை வைகையும், கிருதுமாலும் இரண்டாகப் பிரிக்கின்றன. சுமார் 400-500 வருஷங்களுக்கு முன் காஞ்சிபுரத்திலிருந்து தென்திசை நோக்கி வந்த பிராம்மணக் குடும்பங்கள் இந்த நதிக்கரையில் அக்ரஹாரம் அமைத்து தங்கலாயினர். மேலத்தெரு, கீழத்தெரு, அக்ரஹாரம் என்றே ஊர் அமைப்பு இன்றுவரை. தங்கள் பேரில் 'வாங்கீபுரம்','தூப்புல்' என்று அடைமொழி வைத்திருப்பர் இன்றும். வடகலை ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றுபவர்கள். நதிகளால் பிரிக்கப்பட்டதால் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரெங்கநாதர் திருக்கோவில் நிர்மாணம் செய்து உற்ஸவங்கள் நடத்திவந்தனர். ஊரில் வேதம் படித்தவர்கள் தான் அதிகம். தமிழ்மறைக்கு கொஞ்சம் முக்கியத்துவம் இருக்கும். அஹோபிலமடம் அழகியசிங்கர் சஞ்சாரம் வரும்போது இங்கு தான் 2-3 மாதம் இருப்பார். ஊரே கோலாகலமாய் இருக்கும். 'வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து' என்ற ஆண்டாள் பாசுரத்திற்கு ஏற்றார்ப் போல் வீதி எங்கும் கோலம், பட்டிணப்பிரவேசம், ததியாராதனம் இத்யாதிகள்.

                                           ஊரில் 4-5 குடும்பம் மட்டுமே தென்கலை ஸம்ப்ரதாயத்தவர்கள் (பாண்டிய தேசத்தைப் பொறுத்தவரை இது போன்ற பிரிவினை இல்லை). ஆனால் பாகுபாடும் இன்றி தான் இன்றுவரை இருக்கிறார்கள். வைகை நிறைய வெள்ளம் மாதிரி எப்போதும்தண்ணி ஓடும். கிழக்கு ஆற்றங்கரையை ஒட்டிய வீடு எங்களோடது. ஒரு சமயத்தில் ஆற்றங்கரை போகும் வழியில் ஒரு அரசமரம் மட்டும் இருந்தது. திடீரென்று ஒரு பிள்ளையார் வந்தார். அப்பறம் கொஞ்சம் பெரிய பிள்ளையார் வந்தார்..கொஞ்ச நாளில் அது பிள்ளையார் மேடு ஆற்றங்கரை என்றானது. மடத்து அழகியசிங்கர் ஒரு பாறை மீது நின்று 'இது நன்னா இருக்கே' என்று போட்டோ எடுத்ததாக இன்றும் ஒரு படம் மடத்தில் இருக்கிறது. இந்த ஊரில் 40-வது பட்டம் அழகியசிங்கர் பிருந்தாவனம் இருக்கிறது. (என்னுடைய மூதாதையர்கள் இங்கு ஆராதன கைங்கர்யம் செய்துவந்தனர்). ஊரில் பட்டைப்பெயர் இல்லாத மனிதர்களே இல்லை அல்லது வீட்டிற்கு ஒரு பெயர் இருக்கும். அதிகாலையில் ஸ்ரீனிவாசன் மாமா (பிச்சம்மா பாட்டியின் கணவர்) மிகவும் உரத்த குரலில் சஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டு வீதி வருவார் என்று அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன். அதைக்கேட்டு அனைவரும் அரைகுறை தூக்கம் களைந்து எழுந்து வருவர். கொஞ்ச நேரத்தில் வேதம் சொல்லிக்கொண்டு 2-3 பேர் - அப்பு தாத்தா, இராமஸ்வாமி தாத்தா, யஜு வேத ஜெகந்நாதன் மாமா,  என் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எல்லாரும் ஆற்றங்கரையில் ஸ்நானம், சந்தி செய்யப்போவார்கள் (வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து). மார்கழி மாதம் முழுக்க பஜனை (என் நினைவில் இராஜா - கண்ணன் மாமா). அம்பி மாமா கிருஷ்ண ப்ரேமி பஜனை.. அப்பறம் வயல்களில் வேலை, சிலர் அரசாங்க, டிவிஎஸ் வேலை என்று போவார்கள், குழந்தைகளுக்குப் பாட்டு இத்யாதிகள் எல்லாம்.. கிட்டத்தட்ட ஆழ்வார் சொல்வது போல் 'வேதம் ஒலியும் விழா ஒலியும் பிள்ளை குழாம் விளையாட்டு ஒலியும் அறா' எப்போதும் இருக்கும். சுமார் 35+ வருஷம் மின்ன மும்பையைச் சேர்ந்த இந்த ஊர்க்காரர் சிறு கிருஷ்ணனுக்கு தேர் செய்ய ஏற்பாடாகி, 5-6 அடி உயரத்தில் தேர் செய்தார்கள். தேரை எங்க வைப்பது என்று யோசித்து பிருந்தாவனத்தில் எழுந்தருள பண்ணினார்கள் (பிருந்தாவனத்தே கண்டோமே என்று ஆண்டாள் சொல்வது போல்). அப்பறம் வருஷம் தோறும் கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் திருமஞ்சனம், சாயங்காலம் 3-4 மணிக்கு தேரை வெளியே கொண்டுவந்து, அதற்குரிய ஹோமம், பலி இத்யாதிகள் செய்து, கிருஷ்ணனை எழுந்தருளச்செய்ய 6 மணி புறப்பாடு தொடங்கும். உபய-வேத கோஷ்டிகளோடு குட்டி கண்ணன் வீதி வருவான் - கிட்டத்தட்ட -'தன்னேராயிரம் பிள்ளைகளோடு, வீதியார வருவான்' என்று ஆண்டாளும், பெரியாழ்வாரும் சொல்வது போல் வீதி நிறைய ஜனங்கள் இருப்பார்கள், தட்டுக்களோடும். சிறுவயதில் சிகப்பு பட்டு கட்டிக்கொண்டு குட்டித் தேர் இழுத்த நினைவு இன்றும் இருக்கிறது.

                                            காலத்தின் வளர்ச்சி அந்த ஊரையும் விட்டு வைக்கவில்லை. ஊரின் பாதியை மதுரையின் அடுக்ககங்கள் வந்துவிட்டன. ஊரைவிட்டு பலரும் சென்னையில் வந்து செட்டிலாகிவிட்டனர். வீடுகள் பூட்டப்பட்டு (சுஜாதா சொல்வது போல்) வீட்டில் ஒரு பிள்ளை அமெரிக்காவில் இருக்க, 50-60 பேர் மட்டுமே ஊரைக் காத்துக்கொண்டிருக்கின்றனர். 'நான் பேருக்குத்தான் மதுரை., ஆனா துவரிமானுக்கே  6-7 தடவை தான் போயிருக்கேன். போகணும்னு தான் பாக்கறேன். முடியலை'ன்னு 2 நாள் முன்ன ஒரு என் தலைமுறை நண்பர் முக நூல் மூலமாக ஆதங்கப்பட்டார். சொந்த ஊரிலிருந்து வந்த எல்லாரும் அதே மனோ நிலையில் தான் இருக்கிறோம். 4-5 வருஷங்களாக  தேர் காலையில் முடிந்துவிடுகிறது. முதல் நாளே திருமஞ்சனம். (அதனாலென்ன, ஆயர்பாடி மக்களே கார்த்திகைக்கு கார்த்திகை தலை இருப்ப உடம்பு குளிப்பர் என்கிறது பாகவதம். கண்ணனைப்பற்றி கேட்க வேண்டுமா? :)). இம்முறையும் காலை 8-8:30 மணிக்கே தேர் புறப்பாடானது. பெரியாழ்வார்  திருமொழி முன்னால் போக, காளிங்க நர்த்தனனாக கண்ணன் புறப்பாடு கண்டருளினார். முன்னர் இருந்த பல ஒலிகள் இல்லை என்பதே ஒரு வருத்தம். என்னுடைய பிளான் மிஸ் ஆனதில் அந்த டாஸ்க் ஆர்டர்ருக்கும் பங்குண்டு!







(படத்தில் - இராகவன் மாமா, சீனு மாமா, அர்ச்சகர் சுந்தரவரதன், வாத்யார் மாமா,  சேஷாத்ரி-நாராயணன்-சேகர் மாமா, வெங்கட்ராகவன் மாமா, பிரபு அண்ணா.. முன்ன இது போன்ற பூச்சரங்கள் இல்லாத தேர் தான் இருக்கும்)

                         சுந்தரின் தயவால் 4-5 படங்கள் பதிய முடிந்தது. 'கூடி இருந்து குளிர்ந்து'  என்பது மீண்டும் மலர 'குறை ஒன்றும் இல்லாத கோவிந்த'னைப் பிராத்திப்போம். சுஜாதா ஸ்ரீரங்கத்து தேவதைகளில் சொல்வது போல் அனைவருக்குள்ளும் ஒரு  'ஸ்ரீரங்கத்து தேவதை' இருக்கும். பார்க்கலாம். இதன் தொடர்ச்சியை முடிந்தவரை..!

Sunday, August 14, 2016

விடுதலை வேள்வியில் பொன் நாள்

                        'ஆப்ரஹ்மன் ப்ராஹ்மனோ ப்ரஹ்மவர்சஸீ ஜாயதாம்'..

'இந்த தேசம் முழுவதும் ப்ரஹ்ம தேஜஸ் உள்ள வேதமறிந்தவர்கள் உண்டாகட்டும். இந்த நாட்டில் அரசர்களும், ஆயுதங்களும், வீர்ய சௌர்யமும் உண்டாகட்டும். பசுக்கள் முதலியவைகள் நன்கு உண்டாகட்டும். பெண்கள் நாகரீகமாக திகழட்டும். பருவம் தோறும் நல்ல மழை பெய்யட்டும். மரங்களும், செடிகளும், பயிரும் வளரட்டும். நமது நாட்டிலுள்ள உள்ள எல்லோரின் யோக க்ஷேமம் வளர்ச்சி அடையட்டும். நமது நாட்டை ஆளும் அரசன் புத்தி கூர்மையுடன் மக்கள் நலம் விரும்பும் வீரனாக திகழட்டும்.' (வேத கருத்து, சர்மா சாஸ்திரி அவர்கள், முகநூல் )

                 என்று தணியும் இந்த சுதந்திர தாகம்; என்று மடியும் இந்த அடிமையின் மோகம்!! 

                 இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
                 ஈந்ததும் இந்நாடே -- இதை வந்தே மாதரம், வந்தே மாதரம்
                 என்று வணங்கேனோ?

                            காலை 6:10 மணிக்கு பால் வாங்கப் போகும் போதே கவனித்தேன். ஆழ்வார்கள்  மங்களாசாசனம் செய்த திருவல்லிக்கேணி கோவில் வாசலில் இந்நாட்டின் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது.சைமாவில் 8:30-க்கு கொடியேற்றம் என்று கேள்விப்பட்டு கொஞ்சம் லேட்டா போன, கொடி ஏற்றி அனைவரும் கலைந்திருந்தார்கள். வாசல் தெளித்து வித-வித கோலங்கள் போடப்பட்டிருந்தது. ஆண்டாள் சொன்னது போல் -வெள்ளை நுண் மணல் கொண்டு இத்யாதி.. ஆம் இதுவும் ஒரு நோன்பு தான்- விடுதலை நோன்பு. இதில் செய்த தியாகங்கள் தான் எத்தனை, எத்தனை!. நினைத்துக்கொண்டே தெற்கு மாட வீதி சுற்றி வந்தேன். ஒரு பேனர் என்னை ஏதோ செய்தது, அமைச்சரின் வருகையை முன்னிட்டு வைக்கப்பட்டது.. எத்தனையோ தியாகங்கள் செய்த தியாகிகளை நினைக்க முடியவில்லை நம்மால்.!



















                               

                               















                                       இன்று சுதந்திரக்காற்றைச் சுவாசித்து ~69 ஆண்டுகள் ஆகிறது. எத்தனை பேர் தங்களின் இன்னுயிரை, தங்களின் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள். இந்த நாடே அடிமைப்பட்டு இருக்கும் போது எனக்கு எதற்குத் திருமணம்? நான் மட்டும் எவ்வாறு உணவு உண்பது? காந்தி உண்ணாவிரதம் இருக்கும் போது நாம் மட்டும் சாப்பிடுவது சரியா?, ஏதோ அந்நிய நாட்டில் வடிவமைத்த துணியை எப்படி அணிவது? எல்லாம் கேட்டது அந்தக்காலத்தில் தான். ஆம் அந்தக்காலம்!. இவை எல்லாம் இன்று நினைப்பது கூடக் கஷ்டம். அதற்க்கே ஆள் இருக்காது. மின்ன எல்லாம் எங்க அலுவலகத்தில், சுதந்திரதினம் பற்றி ஒரு மெயிலாவது வரும். கொடியாவது ஏற்றுவார்களா என்று தெரியவில்லை..

                                   இரெண்டொரு நாள் முன்ன ஒரு மெயில், அலுவலகத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் என்று. நான்கூட யாராவது தியாகியையோ, இல்ல நெல்லை கண்ணன் போன்றவர்களையோ அழைத்து ஏதாவது நிகழ்ச்சி நடத்துவார்கள்ன்னு நினைத்தேன்.. தவறு என் போன்றவர்களிடத்தில் தான். வெள்ளியன்று விண் அதிர டிரம்ஸ் சத்தம். காற்றுக்கூட நுழைய முடியாத ஒடிசி கதவுகளை இந்தச் சத்தம் அசைத்தது. வழக்கம் போல் 5-6 பேர் கண்ணாடி வழியே எட்டிப் பார்த்தனர். நான் இருக்கையிலிருந்து பார்க்கும் போது 4-5 ஆண்கள் குறுக்கும்-நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தனர். என் டீமில் இருந்த ஒருவர் சொன்னார் 'இண்டிபெண்டென்ஸ் டே செலிப்ரேஷன், பேஷன் ஷோ'.. 'ஓஹோ' என்றேன். சற்று நேரம் கழித்து ரஹ்மான் வந்தே மாதரம் பாட்டிற்கு கொஞ்ச பேர் ஆடிக் கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். (ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாரதியார் சொன்னதை நிகழ்ச்சி நடத்துபவர்கள் தவறாக நினைத்துக் கொண்டார்கள் போல). சரி. இதுவும் ஒரு வகை சுதந்திரம் தான்.  பேசவோ, எழுதவோ உரிமை இல்லாத நிலையைக் கடந்து, முகநூல் போன்ற சமூக தளங்களில் சகட்டு மேனிக்கு எழுதவும், பேருந்துகளில் சக பயணியர்களைக் கூச்சலிட்டு முடிந்த வரை தொந்தரவு செய்வதுமாக சுதந்திரம் விரிவடைந்திருக்கிறது. அவ்வளவு ஏன்  பட்டப்பகலில் வெட்டிக்கொல்லும் நிலையில் சுதந்திரம் இருக்கிறது. என்றுமே ஒரு பொருளை இலவசமாகவோ, உழைப்பில்லாமலோ வாங்கினால் அதற்க்கு மதிப்புத் தெரியாது. இப்போதைக்கு சுதந்திரமும் அப்படித்தான். இந்தமுறை திங்கட்கிழமை வந்ததால் 3 நாள் விடுமுறை என்ற மகிழ்ச்சி நிலையில் தான் சுதந்திரம் இருக்கிறது. இதைப் பெற என்னென்ன தவம், தியாகங்கள் செய்தார்கள் என்பதைக் கூட எடுத்துச் சொல்ல, கேட்க நாம் பொறுமையாக இல்லை. ஒன்னுக்கும் உதவாத சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை (பட்டிமன்றம், சிறப்புத் திரைப்படம், பீச் காற்று) என்று முடிக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு இந்த சுதந்திரத்தின் மதிப்பை தெரிய வைக்க நாம் முயன்றதில்லை, முயலவும் போறதில்லை!


மதுரை வீரத்திற்கும், பற்றிக்கும் சிறப்பு வாய்ந்தது தான். மதுரையைச் சேர்ந்த சில தியாகிகள்..

சோழவந்தான் ஸ்ரீனிவாச வரதன்-
பத்மாசனி தம்பதி
மதுரை கே.எஸ்.பரமன்
மதுரை A.வைத்தியநாத ஐயர் மதுரை எம்.என்.ஆதிநாராயணன்.
சுந்தரராஜ ஐயங்கார். எம்.ஆர்.எஸ்.மணி
மதுரை கே.என்.கிருஷ்ணன் ஐயர்  ஏ.வி.செல்லையா.
மதுரை தியாகி ஸ்ரீநிவாச ஆழ்வார்
-  வி.கே.டி.பங்கஜத்தம்மாள்
எம். சிவசாமி.
மதுரை எஸ்.வி.கே. தாஸ். து. நவநீதகிருஷ்ணன்.
மதுரை தியாகராஜ சிவம்
 (திருமங்கலம் சுப்பையர்)
மதுரை டாக்டர் ஜார்ஜ் ஜோசப் 
திம்மநத்தம் கே.ஆர்.தங்கமுத்து மதுரை ஸ்ரீநிவாச ஐயங்கார்
மு. பழனியாண்டி சேர்வை சோழவந்தான்முனகல பட்டாபிராமய்யா 
தியாகி வை.சங்கரன் துவரிமான் இராமசாமி ஐயங்கார்
திருமங்கலம் புலி மீனாக்ஷி சுந்தரம்

சிறு துளி போல, இந்த இருவரை பற்றிப் படித்தாலே போதும், மேலே பார்த்த போஸ்டர் ஓட்ட மனது இடம் தராது.

தியாகி ஸ்ரீனிவாச வரதன்-பத்மாசனி அம்மாள்: 

மதுரையைச் சேர்ந்தவர்கள். ஆச்சாரமான பிராமண குடும்பத்தைச் சார்ந்தவர்கள். மதுரை-சோழவந்தானில் பெரும் தனம் படைத்தவர்கள். பாரதியாருக்கு நெருக்கமானவர்கள். 'உன் சொத்தை விற்று பத்திரிக்கை நடத்த பணம் அனுப்பு'ன்னு பாரதி உரிமையோடு கேட்க, உடனே செய்தார் வரதன். 1922-கள்ளுக்கடை மறியலில் (இன்றைய டாஸ்மாக் இல்ல:( ) கைதாகி சிறை செல்ல, மனைவியும் அவர் வழியில் நாட்டுக்கு சேவை செய்ய வந்தார். பாரதி பாடல் பாடி வீடு வீடாக கதர் துணி விற்றார். 1930-ல் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் போலீசாருக்கு சவால் விடுத்துப் பேசி கைதாகி 3 மாத கர்ப்பிணியாக சிறை சென்றார். சரியான உணவு இல்லை, தானே சமைக்க அனுமதி இல்லை. அனுமதி கேட்டு 1 வாரம் உண்ணாவிரதம் இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு கருவும் கலைந்தது. இந்நாட்டிற்குப் பிறக்கும் முன்பே ஒரு உயிர் தியாகமானது. சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் போராட்டம், கூட்டம், சொற்பொழிவுகள். இவரது பேச்சிற்க்கே தனிக் கூட்டம், மக்கள் உணர்ச்சியைத் தட்டி எழுப்பிவிட்டார்.ஏற்கனவே 3 குழந்தைகளைத் தியாகம் செய்து,  நான்காவது முறையாக கர்பம் தரித்த போது, சுப்ரமணிய சிவத்துடன் காவிரி நடைப்பயணம். 8 மாத சிசுவோடு நடை. எந்நேரமும் குழந்தை பிறக்கலாம் என்றபோதும் ஒக்கேனக்கல் வரை நடந்து சென்று சுதந்திர பிரச்சாரம், பாரதி பாடல்கள் என்று தன் மீது அக்கறை இல்லாது, நாட்டையே செல்வமாகக் கருதினார். நடு வீதியில் குழந்தை பிறந்தது. சீதோஷண நிலை காரணமாக 3 நாட்களில் அந்தக் குழந்தையையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஒரு சில நாள் ஓய்விற்குப் பிறகு மீண்டும் சுதந்திர போராட்டம். 1936-ல் தன்னையும் இந்நாட்டிற்காகத் தியாகம் செய்தார்.

வைத்தியநாத ஐயர் பற்றித் தெரியாதவர்கள் மதுரையில் இருக்க முடியாது. அது போல் அவரின் மகன் சங்கரன் அவர்களையும். குடும்பமே விடுதலைப் போரில் இறங்கி தியாகம் செய்தது.

தஞ்சை வெ. கோபாலன் எழுதிய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள் நூலிலிருந்து...

வை. சங்கரன்
                 ஏ.வி.சங்கரன், எம்.ஏ.,பி.எல். இவர் 1942இல் சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது மகாத்மா காந்தி ஆகாகான் அரண்மனையில் உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற செய்தி கேட்டுத் தானும் உண்ணாவிரதம் இருந்து, மறியலிலும் ஈடுபட்டார். இவர் மறியல் செய்தமைக்காக அன்றைய இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் 6 மாத காலம் தண்டனை விதிக்கப்பட்டார். இவர் ஒருமுறை திருச்சி தேவர் அரங்கத்தில் நடந்த எம்.ஆர்.ராதாவின் கீமாயணம் நாடகம் பார்க்கப் போயிருந்தார். அந்த நாடகத்தில் எம்.ஆர்.ராதா ராமனை இழிவு படுத்தியும், சீதையைப் பற்றிக் கொச்சையாகப் பேசியும் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எழுந்து சங்கரன், நீங்கள் சொல்லும் இந்த 'கீமாயண'க் கதைக்கான விஷயங்கள் எந்த நூலில் இருக்கிறது. இவற்றுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா என்று கேள்வி எழுப்பினார். திராவிட இயக்க நிகழ்ச்சிகளில் இதுபோன்ற நியாயமான கேள்விகளை யாராவது கேட்டால் என்ன ஆகுமோ அது அன்று சங்கரனுக்கு ஆயிற்று. இது நமது சுதந்திர இந்தியாவில் எல்லா உரிமைகளும் பெற்றிருந்த நேரத்தில், அரசாங்கத்தால் அல்ல குடிமக்களில் ஒரு பகுதியினரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. எனினும் மதுரை ஏ.வி.ஐயர் குடும்பம் ஒரு தியாகக் குடும்பம்.


************விடுதலையைப் போற்றுவோம்! பாரத மாதாவிற்கு மங்களம்! நித்ய ஜெய மங்களம்! வந்தே மாதரம்!****************