Tuesday, August 15, 2017

படைத்திறல் பல்லவர்கோனும் பரம வைஷ்ணவன் பாண்டியனும்

தம்பியொடு தாமொருவர் தந்துணைவி  காதல் துணை யாக முனநாள்
வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது மேவு நகர்தான்
கொம்புகுதி கொண்டு குயில் கூவ மயிலாலு மெழிலார் புறவு சேர்
நம்பியுறை கின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நன்னு மனமே - பெரிய திருமொழி 5-10-6

(மரக்கொம்புகளில் தமது தோகைகளை அசைத்து அசைத்து குயில்கள்
கூவ, மயிலினங்கள் ஆடிக்கொண்டிருக்க எழில் நிறைந்த பொழில் சூழ்ந்த
சோலைகளால் சூழப்பட்ட இந்த நந்திபுர விண்ணகரத்தில்தான் தன்
மனைவியொடும் தம்பியொடும் கொடிய கானகமெல்லாஞ் சுற்றித்திரிந்த
ராம்பிரான் உறைகிறான் )

குடைத்திறல் மன்னவ னாயொருகால் குரங் கைப்படை யா,மலை யால்கடலை*
அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி*
விடைத்திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச்செரு வேல்வலங் கைப்பிடித்த*

படைத்திறல் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே* -பெரிய திருமொழி 

(நென்மெலியென்னும் நகரத்தில் காளையின் வலிவுபோன்ற வலிவையுடையனான வில்லவனென்கிற அரசன் அஞ்சி நடுங்கும்படி யுத்தத்திற்குக் கருவியான வேற்படையை வலக்கையிலே பிடித்தவனும் ஆயதங்களை ஆளத்தக்க மிடுக்கை யுடையனுமான பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே) 


                                 இன்று, சுதந்திர தினம். அலுவலகத்தில் தேசியக் கொடி கொடுக்க முற்படும் போது (ஒரு ஈமெயில் மூலம் தகவல் சொல்லி), 'ஸ்வீட்ஸ் அட் மை டெஸ்க்' என்ற மெயில்-க்குக் காட்டும் அக்கரையில் பாதி கூட யாரும் காட்டவில்லை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒருவர் என்னிடம் வாதிட்டார், இன்று ஒரு உலக நடிகர் பேசுவது போல் -எது சுதந்திரம் என்று.. கொஞ்சமல்ல, நிறையவே கவலையாக இருக்கிறது.. நாம் சுதந்திரத்தின் பெருமையை, ஆனந்தத்தை இழந்து வருகிறோம்.நாம் பட்ட அடிமைத்தனம் என்ன என்பதைத் தெரியாமலே அடுத்த தலைமுறை வளர்கிறது, நம் கல்வியும் போதிக்கவில்லை. சரி அதிருக்கட்டும்.

                                    'பெற்ற தாயினும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனி சிறந்தனவே'. இந்த பொன்மொழிகள் எந்தக் காலத்திலும் பொருந்தும்.  பொதுவாக, நம் நாட்டு விடுலைக்குப் பாடுபட்டவர்களைப் பற்றி எழுதுவது இந்த நாளில் என்றிருந்தது. சற்றே மாறுதலாக, பாண்டியன்-பல்லவன் பற்றி எழுத முற்பட, வழக்கம் போல் நம் 'சாண்டில்யன்' துணைகொண்டு. இவர்களுக்குள் நடந்ததும் ஒரு சுதந்திரப்போர் தான். பரங்கியர் நம் நாட்டில் ஊடுருவி, நம் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டதால் நாம் போராடி அதை மீட்டோம். இதே நிலை தான் ஆதி முதல் ஆண்ட மன்னர்களிடத்தும். தங்கள் எல்லையை ஒரு மன்னர் விஸ்தீரிக்க நினைக்க, மற்றவரின் சுதந்திரம்  அதனால் பறிபோகிறது. பெரும் போர்கள் நிகழ்ந்தது, வாழை அடி வாழையாக.

                                  புத்தகத்தில் படங்கள் எதுவும் இல்லை. இந்த முறை நாமே ஒரு படம் வரையலாம் என்று எடுத்து சில மணிகள் செலவிட்டு வரைந்தது இந்தப்படம். உள்-வெளி கோட்டைகள், பல்லவ மன்னன் நிர்மாணித்த வைகுந்தப் பெருமாள் கோவில், மன்னன் (மல்லனோ, பாண்டியனோ உங்கள் யூகம்), நீள் விழி. இந்தப் புத்தகத்தின் மூலம், பள்ளியில்-கல்லூரியில் கற்ற வரைகலைக்கு புத்துயிர் கொடுக்க முடிந்தது. மெஷின் ட்ராயிங், இன்ஜினியரிங் ட்ராயிங் எல்லாம் வரைந்து, இப்போது மன்னர் முகம், கோட்டை எல்லாம் வரைய கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. 

                                    'நீள்விழி' என்ற இந்த நாவல் ஜடிலன் பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனுக்கும், நரசிம்மவர்மன் (சிவகாமியின் சபதம்) வழியின் ஐந்தாவது தலைமுறைக்கும் சில நாட்களே நடந்த பெரும் போர். சிவகாமியின் சபதத்தில் கல்கி எப்படி மகேந்திர வர்மனின் இராஜ தந்திரங்கள், போர் முறை பற்றிக் கூறினாரோ, அது போல் இங்கு சாண்டில்யன் பாண்டியனை ஒரு சூப்பர் ஹீரோவாக சித்தரித்துள்ளார்., உண்மையும் அது தான். ஜடிலன் இருந்த வரை பல்லவர்கள் தலை எடுக்க முடியவில்லை. கதை நடக்கும் காலம் ஏழாம் நூற்றாண்டு. தமிழகத்தில் வைணவம் விரைந்து வளர்ந்து, பல சாம்ராஜ்யபதிகள் வைணவர்களாக இருந்தார்கள். பராந்தகனும், பல்லவ மல்லனும் 'பரம வைஷ்ணவர்கள்' என்று இந்த நூல் முடிவு வரை கூறுகிறது (நூல் மட்டுமல்ல, செப்பேடுகளும்) வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்பது உட்பட. 

                                   சாண்டில்யன் என்ற பாஷ்யம் ஐயங்கார் ஒரு வைஷ்ணவர். அவர் இது சம்பந்தமாக கற்ற கல்வி, கண்ட விஷயங்கள் எல்லாம் கற்பனையின் விழுதாய் கதையில் நுழைந்துள்ளது. ஜடிலன் ஒரு வேதாந்தி என்று அறிமுகம் செய்துவிட்டு வேதாந்த விஷயங்கள் எல்லாம் அவ்வப்போது நுழைக்கிறார்.  சாண்டில்யனின் சொல் விளையாட்டு இதில் கொஞ்சம் வெளிப்படுகிறது. அது பற்றி அவரின் நெருங்கிய உறவினர் சொன்ன ஒரு நிகழ்வு. நான் அமெரிக்காவில் பணியின் காரணமாய் இருந்த போது அங்கு கிடைத்த நண்பர்களில் முக்கியமானவர் - அரங்கராசன் ஸ்ரீநிவாசன் (http://rangasrinivasan.blogspot.in/). இவருக்கும் இந்தக்கதைக்கும் என்ன சம்பந்தம்- திருமங்கையாழ்வாரும், சாண்டில்யனும் தான். திருமங்கையாழ்வார்  எனில் மயலே பெருகும்  எண்ணமுடையவர் அரங்கராசன்., நந்திவர்மன்  வைஷ்ணவனாதலால் நிறைய கோவில் கைங்கர்யங்கள் செய்துள்ளான். பன்னிரு ஆழ்வார்களில் கடைசியான திருமங்கையாழ்வார், நந்திவர்மனின் போர்த் திறம், கோவில் திருப்பணி பற்றி 'பரமேச்சுவர விண்ணகரம்' என்ற திவ்ய தேசத்தைப்பற்றி சொல்லி, மன்னனையும் பாடியுள்ளார் (மேலுள்ள பாடல் பார்க்க. இது போல் பத்து பாடல்களை பாடியுள்ளார்). 
    
                                  நாதன் கோவில் என்ற நந்திபுர விண்ணகரம் என்ற ஊரையும் இந்த மன்னனே ஸ்தாபித்தார். மன்னர்கள் என்னதான் கோவில் கட்டிச் சென்றாலும் இன்று பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இல்லைன்னா யுனெஸ்கோ வரை நம் 'புகழ்' நாறிவிடும். நம்ப அரங்கராசன் இதை மட்டுமே ஒரு வேலையாக/கைங்கர்யமாக எடுத்து தஞ்சைச் சுற்றியுள்ள வைணவ கோவில்களில் 'பெரும்' பொருட்செலவு செய்து திருப்பணிகளை/கைங்கர்யங்களைச்  செய்து வருகிறார். முக்கியமாக, திருவாலி என்ற வைணவ திவ்ய தேசத்தை தன் சொந்த ஊராகவே மாற்றி கைங்கர்யம் (இவை பற்றி வேறு பதிவில் கூடுதலாக) பல செய்து வருகிறார். அரசன் கட்டியதைக் காக்க 'அரங்கத்தரசு' (அரங்கராசன்) தான் வர வேண்டும். அரசாங்க உதவி எதிர்பார்க்காமல் நாமே இது போன்ற புராதன கோவில்களைக் காக்க வேண்டும். இவர் சாண்டில்யனின் உறவினர் . ஒரு முறை சாண்டில்யன்,  இவரின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு வந்த போது சொன்னது இது  தன்னுடைய வாழ்த்துரையில் - "இவன் (அரங்கராசன்) பாட்டுக்கு வாசிக்கறானா?, இல்லை இவன்பாட்டுக்கு வாசிக்கறானா? என்றில்லாமல் அருமையாக வாசித்தான்". சாண்டில்யனின் வார்த்தை விளையாட்டுக்களில் இது ஒரு ரியல் டைம் சாம்பிள்.


பேக் டு நீள்விழி

                                          இரண்டாம் நந்திவர்மன் என்கிற பல்லவ மல்லன் 732 - 796-களில் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன். பல்லவ மன்னன் பரமேச்வரவர்மனுக்கு குழந்தை இல்லாததால், அமைச்சர்கள் கம்போடியா சென்று அங்கிருந்த பல்லவ வம்சாவளி அரசர்களை அழைக்கின்றனர். யாரும் வர மறுக்க, நந்திவர்மன் பன்னிரண்டு வயதில் அரியணை ஏறுகிறார் தமிழகம் வந்து, காஞ்சியைத் தலைமையாகக் கொண்டு. இவர் காலத்தில் பல்லவ சாம்ராஜ்யம் விரிகிறது என்பதை விட, பாண்டியர்களை எதிர்த்து காப்பாற்றினார் என்றே சொல்லலாம். அந்த தலைமுறை பாண்டியர்கள் மிகவும் வலு உடையவர்களாக இருந்தனர்..ஏழாம் நூற்றாண்டிற்கு முன் தமிழகத்தில் வாதாபி சாளுக்கியர்,காஞ்சி பல்லவர், மதுரை பாண்டியர்கள் மாமன்னர்களாக தன்னை உயர்த்திக்கொள்ள பெரும் போர்கள் செய்தனர். பின், சாளுக்கியர் சற்றே பின்வாங்க, பல்லவர் ஆதிக்கம் அதிகமானது. சோழநாடும் பல்லவர்களுக்கு அடிமைப்பட்டிருந்தலால் பாண்டியர்கள் சோழப் படையின் துணைகொண்டு பல்லவர்களை எதிர்த்தனர். சிலவற்றில் வெற்றியும் பெற்று, பல்லவர்கள் மேலும் தங்கள் எல்லையில் வராதவாறு பார்த்துக் கொண்டனர். ஆனால், முழுதும் பல்லவ சாம்ராஜ்யத்தை அழிக்க முற்படவில்லை. 

                                          கதை முழுதும் 'பெண்ணாகடம்' என்ற காவிரிக்கரை ஊரில் நடக்கிறது. சோழ நாடு, பல்லவ நாட்டிற்கு அடிமையாய் இருக்கிறது. தஞ்சை போகும் வழியில் காவிரிக்கரையில் ஒரு ஊரை கோட்டைகளோடு உருவாக்கி சோழ நாட்டைப் பலப்படுத்த நினைக்கிறார் சோழன், தர்மாதிகாரி துணையோடு. கதையில் 5-6 முக்கிய கதாபாத்திரங்கள் தான்.  தர்மாதிகாரி, ஜடிலன் பாண்டியனை (765-815) பல்லவர்களுக்கு எதிராக போர் புரிய அழைக்கிறார். நல்ல வீரனை அனுப்ப, நாமே போகலாம்ன்னு பாண்டியனே வாரான் இந்த பெண்ணாகடத்திற்கு. நீள்விழி, அழகும், நீள் விழிகளும் பொருந்திய சோழன் மகள். அவளை அடையவும் இந்த போர் எனலாம். கொங்கு தேச அரசரும், பல்லவனும் அதற்க்கு முயன்றனர். இடையில் நம்ப பாண்டியன், "கடைசியில் அவள் இடையைப் பற்றியதும் பாண்டியனே!" (சாண்டில்யன் பாஷையில் சொல்வதானால்). நீள்விழி இந்த பெண்ணாகடத்தில் இருக்கிறார், சொந்த நாட்டில் சிறை போல். இந்த ஊர் உள் கோட்டை, வெளிக்கோட்டை, வாவி, தோப்புகள் என்று நதிக்கரையில் சொர்க்கம் போல் நிர்மாணிக்கப்பட்டது.  ஊருக்கு ஒரு உளவாளி இருப்பது போல், சோழனின் தளபதி- விஜயன் பல்லவனின் உளவாளி. 

                                         பாண்டியன் ஒரு சாதாரண மனிதன் போல் உள்ளே நுழைகிறான். சோழர்களின் பரம்பரை வாள் இவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அது மிகப்பழமையானது, கரிகாற்ச் சோழன் வீசிய, பிடியில் வைரங்கள், இரத்தினங்கள் பதித்த வாள். அதைவைத்து பல்லவ மன்னனோடு சண்டையிடுகிறார். கரிகாற்ச் சோழனுக்கு பின் ஏழு தலைமுறைக்கு இது பயன்படாது. ஒரு அரச வேதாந்தி தான் இதைப் பயன்படுத்தி நாட்டை மீட்பர் என்று ஓலையில் எழுதப்பட்டதாக சொல்கிறார் தர்மாதிகாரி-மாறன்காரி (இவரும் வைஷ்ணவர், மதுரைச் சேர்ந்தவர், சோழனிடன் இருந்தார் என்கிறது வரலாறு) . கேட்கவே வேண்டாம், ஜடிலன் வேதாந்த மழையே வர்ஷிக்கிறான். 'பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க பெரிய படை வேண்டும், இல்லை வெற்றி கொள்ளப்பட்ட அரசர்கள் சிற்றரசர்களாக இருக்க வேண்டும்' .. இது இன்று வரை உண்மை என்பதை பல தருணங்களில் காணலாம்.

                                     அரச குமாரியின் தனி  'வாவி'யின் அழகை வர்ணிக்க சாண்டில்யனுக்கு கேட்கவா வேண்டும், கூடவே நீள்விழி வேறு. ஜடிலன் திட்டமிடுவது விஜயன் மூலமாக நந்திவர்மனுக்குத் தெரிகிறது. அதற்குள் ஜடிலன் உள்-வெளி கோட்டைகளைப் பலப்படுத்துகிறார். 'மதுரை' கூல வணிகன் அப்போது முதல் இருந்திருக்கிறார்கள். அவர்க்கு ஒரு ஓலை மூல செய்தி செல்கிறது ஜடிலனிடத்திருந்து. சில நாட்களில் மதுரை முத்துக்கள் எல்லாம் வந்து இறங்கி வியாபாரத்தளமாகிறது பெண்ணாகடம். காலத்திற்கு ஏற்றாற்போல், இதுல ஒரு வைஷ்ணவ துறவி தான் பல்லவனின் அந்தரங்க உளவாளி. பிற்காலங்களில் புத்த துறவிகள் இருந்திருக்கிறார்கள். நந்திவர்மன் படை வருவதற்குள் உட்கோட்டை முழுதும் இருந்த வணிகர்கள், பாண்டிய வீர்களாக மாறுகிறார்கள். பல்லவன் படை காவேரியின் அக்கரையில் தங்கி, படை எடுக்க தயாராகிறது. போர் முரசு கொட்டுகிறது., ஜடிலன் பொறுத்திருந்து பாய்ந்து, தாக்குகிறார். பல்லவன் புரவிப்படை மட்டும் வைத்துத் தாக்க, பாண்டியன் பாகுபலி படம் போல் சரம் போல் அம்புகளைப் பொழிந்து, புரவிப்படையை காலாட்படையாக மாற்றுகிறார். பல்லவன் நிலை குலைய, பாண்டியனை நேரடி சண்டைக்குப் போகிறார். கடும் சண்டைக்குப் பிறகு, பல்லவன் தலையில் பாண்டியன் அடிக்க பல்லவன் சரிக்கிறார். பாண்டியன் அவரைக் கொல்லாமல் 'மாவீரன், ஒரு வைஷ்ணவனைக் கொல்லக் கூடாது' என்கிறார். பல்லவர் படை பின்வாங்க பின் நடப்பது நமக்கே தெரியும். சாண்டில்யன் வரிகளில் முடிவுரை - 'புரவியின் மீதிருந்த  நீள்விழியின் இடையைச் சுற்றி பாண்டியன் இடது கையும் ஊர்ந்தது'.. 


மேலும் சில விஷயங்கள்:

* "பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீள் முடி நில மன்னவன்" என்று பாண்டியனை சீவரமங்கல செப்பேடுகள் சொல்கிறது. 

* கதையில் வைஷ்ணவ சின்னங்கள் (ஸ்ரீ சூர்ணம்) தரித்து மன்னர்களும், மற்றவர்களும் இருந்ததாய் சொல்லப்படுகிறது. 

* நந்திவர்மன்-II அவரின் பேரன் நந்திவர்மன்-III .. இவருக்குத்தான் தமிழ் இலக்கியமான 'நந்திக் கலம்பகம்' பாடப்பட்டது. தமிழ் புலவர்கள் அறம் பாடி அழிப்பர் என்பதைக் காட்டவே இது எழுதப்பட்டு, அதை மன்னனே நிரூபிக்கிறார். அதில் வரும் பாடலுக்கு ஏற்ப அவரே இறக்கிறார் தமிழ் சொல்லை மெய்ப்பிக்க.. அதாவது, புலவர்களின் அறச் சொல்லுக்கு வலிமையுண்டு என்பதை விளக்க. இப்போது நினைக்கலாம் என்ன வகையில் தமிழ் பாடல்கள் உள்ளதென்று. 

* பல்லவ நாட்டை அறுபத்தைந்து ஆண்டுகள் ஆண்ட இரண்டாம் நந்திவர்ம பல்லவன் மிகச் சிறந்த திருமால் பக்தனாகத் திகழ்ந்தான். பல பழைய கோயில்களைப் புதுப்பித்தான். புதிய கோயில்களைக் கட்டினான். காஞ்சியில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோயில் (பரமேசுவர விண்ணகரம்), முக்தேசுவரர் கோயில், கூரத்தில் உள்ள கேசவப் பெருமாள் கோயில் முதலியன இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கட்டிய கோயில்களாம். சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து வந்து இரண்டாம் நந்திவர்ம பல்லவனை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான். கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட மற்றக் கோயில்களுக்குத் தாராளமாக நன்கொடைகள் தந்து, சில காலம் காஞ்சியில் தங்கியிருந்துப் பின்னர் சாளுக்கிய நாடு திரும்பினான். பகை அரசனையும் பக்தி எனும் சரடு பிணைத்திருந்ததை இதனால் அறிய முடிகிறது. (தமிழ் விர்ச்சுவல் லைப்ரரி - tamilvu)

* பாண்டியரது செல்வாக்கு வளர்வதைக் கண்ட நந்திவர்ம பல்லவன் கொங்கு மன்னருடனும், கேரள மன்னருடனும் தகடூரை ஆண்ட அதியமானுடனும் உடன்படிக்கை செய்து கொண்டு வலிய கூட்டணியை அமைத்தான். பாண்டியன் இக்கூட்டணியை வென்றான். கொங்கு நாடு பாண்டியர் வசமானது. கொங்கு அரசன் பாண்டியனால் சிறை பிடிக்கப்பட்டான். அதியமான் தோற்றான். பாண்டிய நாட்டுப் படை பல்லவ நாட்டை ஊடுருவிச் சென்றது. தஞ்சை மாவட்டத்தின் மையத்தில் உள்ள, ‘இடவை' எனும் இடத்தில் பாண்டியன் பாசறையை அமைத்தான். பாண்டியனை வெல்வதற்கு நந்திவர்ம பல்லவன் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாவது விக்கிரமாதித்தன் காஞ்சியின் மீது படையெடுத்து, வந்து, வென்று கைலாசநாதர் கோவிலுக்கு நன்கொடைகள் வழங்கிச் சென்றான். இராட்டிரகூட மன்னன் தந்திதுர்கனுக்கும், பல்லவ நந்திவர்மனுக்கும் போர் நடந்தது. பல்லவமன்னன், இராட்டிரகூட மன்னன் மகள் ரேவாவை மணந்து கொள்ளவே, பகை நட்பாக மாறியது. பல்லவரது செல்வாக்கு சரியத் தொடங்கியதை இந்நூற்றாண்டு அரசியல் வரலாறு பதிவு செய்கிறது. (தமிழ் விர்ச்சுவல் லைப்ரரி - tamilvu)








Monday, August 7, 2017

மதுரையின் பெண்ணரசி - இராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள்
                                    இராணி மங்கம்மாள் அவர்களை பற்றி ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடிய போது எழுத்தாளர் முத்து ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்தப் புத்தகத்தை சஜ்ஜஸ்ட் செய்தார். இந்த புத்தகத் திருவிழா போனதின் நோக்கம் இதையும் வாங்கத்தான். முதல் வரிசையிலேயே ஒரு கடையில் இருந்தது. எழுத்தாளர் நா.பார்த்தசாரதி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். எனக்குத்தெரிந்து இந்த ஊர் மூன்று எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது - நா.பார்த்தசாரதி, முத்து ஸ்ரீனிவாசன், நரசய்யா(நரசிம்மன்). மூவரிடத்திலும் நான் இராணி மங்கம்மாள் பற்றி ஒரு விஷயத்தைப் படித்திருக்கிறேன். நரசய்யா அவர்கள் 'ஆலவாய்-மதுரை மாநகரத்தின் கதை' என்று ஒரு ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதியுள்ளார். மதுரை பற்றி கல்வெட்டு சான்றுகளோடு, மிக ஆழமான விஷயமுள்ள புத்தகம்.. மதுரையில் பண்டைய காலம் எப்படி இருந்தது, கள்ளர்கள் வெள்ளையர்களை விரட்டி திருமோகூர்-அழகர் கோவில் நகைகளை மீட்டது, பாண்டிய-நாயக்கர்களின் ஆட்சி, மீனாட்சி கோவிலின் பூஜை முறை, அதை ஆங்கிலேயர்கள் முறைப்படுத்தியது, மிராசு நியமித்தல், மங்கம்மா ஆட்சி நிர்வாகம் இப்படி பல சுவாரஸ்ய தொகுப்புகளாக, ஆதாரங்களுடன் திரட்டியிருக்கிறார் நரசய்யா.
                                 தீபம். நா.பார்த்தசாரதி அவர்களின் இராணி மங்கம்மாள் கதை, ஆதாரங்களைக் குறிப்பிடாமல் இயல்பாக நடந்தது போல் நகர்கிறது. அவர் ஆராய்ந்து எழுதியிருந்தாலும், மேற்கொள் தரப்படவில்லை சாண்டில்யன் போல் ஆங்காங்கு. கண்டிப்பாக வாங்கி படித்து, பாதுகாக்க வேண்டிய புத்தகம்.. புத்தகத்தைப் படிக்கும் போது 'பாகுபலி-2' ஓடிக்கொண்டிருந்தது. அதில் வரும் மகிழ்மதி இராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) கனகச்சிதமாகப் பொருந்தினார்.கதை முழுவதும் எனக்கு அந்த முகம் தான் தெரிந்தது. மங்கம்மாள் போல் தான் அவரும், குழந்தைகளைக் காப்பாற்றி அரசை நிர்வகித்தார். பெண்கள் நேரடியாக போரில் இறங்குவது கிடையாது, ஜான்சி இராணி விதிவிலக்காக இருக்கலாம். இராணி மங்கம்மாளும் அவ்வாறே. திறமையான நிர்வாகி. நேரடிப் போர்களைத் தவிர்த்து, பணிய வேண்டிய இடத்தில் பணிந்து, போர் புரிய வேண்டிய இடத்தில் தளபதிகளை வைத்துப் போரிட்டு பதினெட்டு ஆண்டுகள் நிர்வாகம் சேர்த்தார் எனில் சாதாரண விஷயமில்லை. அது எப்படிசாத்தியம், நம்ப ஐடி-ல கூட இன்டெர்னல் ப்ராஜெக்ட் மட்டும் பார்ப்பவர்கள் இருப்பார்கள், அவர்கள் கிளைன்ட் கூட நேரடியா வேல செய்யாம ப்ராஜெக்ட் திறம்பட நடத்துவார்கள்., அது ஒரு கலை. அது மாதிரித் தான் மங்கம்மாளும். வரும் பிரச்சனை, வரப்போகும் பிரச்சனை எல்லாம் திறம்பட கையாண்டு, போர்களைக் குறைத்து நாட்டை பலப்படுத்தினார், என்பதை விட வளப்படுத்தினார்.
                                        1689 முதல் 1704 வரை மதுரையை ஆண்ட மங்கம்மாள் காப்பாட்சியாளராகவே இருந்தார். எழுத்தாளர் மதுரை என்பதால் பல இடங்களில் அந்த வாசனை வருகிறது. கதை சித்திரைத் திருவிழாவிலிருந்து துவங்குகிறது. இன்றைய காந்தி ம்யூசியம் தான் மங்கம்மாள் அரண்மனை. தமுக்கம் தான் தோட்டம், விளையாட்டுத் திடல் எல்லாம். மங்கம்மாள் திரிசிராமலையையும் (திருச்சி), மதுரையையும் தலைமையாகக் கொண்டு ஆண்டுள்ளார். திருமலை நாயக்கர் ஆட்சியின் கீழ் மதுரை, திருச்சி மட்டுமல்லாது, கோவை, சேலம் , திருவிதாங்கூர் என்று பரவி இருந்தது. அவரின் ஆட்சியில் விஜய நகர பேரரசு கொஞ்சம் வலுவில்லாமல் இருந்தது, இவரின் இறைப்பணி, மக்கள் பணி எல்லாம் இவரை ஒரு பொற்கால ஆட்சியாளராக மாற்றியது. அவரின் பின் அறுவர் ஆட்சி செய்தாலும் கடைசிவரை வரலாற்றில் நிலைத்தது இராணி மங்கம்மாள். நாயக்கர்க்கே இருந்த இறைபணி இவர் ஆட்சியிலும் தொடர்ந்தது. ஆனால், நாயக்கர் மகாலுக்கு இவர் போனதில்லை, அதை விரும்பவும் இல்லை என்று இப்புத்தகம் சொல்கிறது.
                                        தனக்கு தனி அரண்மையை ஏற்படுத்தி இரண்டு தலைமுறைகளை ஆட்சியில் வைத்தார். இவரின் தந்தை லிங்கப்ப நாயக்கர் பெரிய இன்ஸ்பிரஷன். 'ஆறு கரடு முரடாய் ஓடி, பின் அமைதியாகி, மக்களுக்கு பயன்பட்டு கடலில் கலக்கும். அது போல் இருக்க வேண்டும்' இது இராணி மங்கம்மாளுக்கு தந்தை சொல்லித்தந்து ஒரு தைரியசாலியாக வளர்த்தார். கணவர் சொக்கப்ப நாயக்கருக்கு பின் பெரிய அரசை பதினைந்து வயது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூலம் நிர்வகித்தார். எதிர்பாராமல் இவர் மகன் அரசனானான். பெரிய போர்கள் செய்யவில்லை. அன்னை மங்கம்மாள், பிரதானி-இராயசம் அச்சையாவிடமும் ஆலோசனை செய்து ஆட்சி நடத்தினார். கிழவன் சேதுபதி இராமநாதபுரம் சீமையை ஆண்டான். அவர், நாயக்கருக்கு கப்பம் கட்டாமல் இருந்து தன்னை தனி அரசனாக அறிவித்துக்கொண்டார். சேதுபதி புத்தியில் சிறந்தவர். மறவர் சாம்ராஜ்யம் அமைக்க முடிவு செய்தார். மக்களும் உதவினார். அவர் என்ன சொன்னாலும் செய்ய, உயிரையும் கொடுக்க. அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர், இராமநாதபுரம் போர் தொடுக்க அதை சாதுர்யமாகக் கையாண்டு, தீர்த்தயாத்திரையாக மாற்றினார் சேதுபதி. இவரின் பலத்தால் தான் இன்று வரை, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை பகுதிகள் மறவர் மக்கள் உள்ளதாய் இருக்கிறது. இவர் கடைசிவரை சிம்மசொப்பனமாக இருந்தார்.
                                           ஏழே ஆண்டுகள் அரசராய் வாழ்ந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் அம்மை நோயால் இறக்க, சில மாதங்களில் அவரின் ஒரே மனைவியும் இறக்க, மங்கம்மாள் மீண்டும் இராணியானார். பச்சிளம் குழந்தை, தன் பேரன் விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்கு (1706 முதல் 1731) காப்பாளராக இருந்து ஆட்சி நடத்தினார். இராணி எதிர்பார்த்தது போல் பேரன் இல்லை. ஒருநாள் பேரன் தன்னைக் கொலை செய்வது போல் கனவில் கண்டார். இவரின் கனவு பல பலித்தது. அது போல் இதுவும். பேரனை தான் நேரடியாக வளர்க்க முடியாமல், அரண்மைனயில் இருக்கும் சிலர் நாயக்கருக்கு துர்-புத்திமதி சொல்லி தூண்டிவிட்ட, இராணிக்கு எதிராகத் திரும்பினார். இராயசத்துடன் இவரை இணைத்துப் பேசி, தன்னை அரசராக்கும் படி நிர்பந்த்தித்தார். இராணியே இவரைக் காவலில் வைக்க, அதிலிருந்து தப்பித்து, மங்கம்மாளை சிறைப்படுத்தினார். சாதாரணமானதல்ல, தனி அறையில் பட்டினி சிறை. ஆட்சியைக் கைப்பற்ற மந்திரி, சேனை எல்லாவற்றையும் 'சரி' காட்டினார். அன்ன சத்திரம், கோவில் பணிகள், மக்கள் நல திட்டங்கள் எல்லாம் தந்து மதுரையை ஆண்ட பெண்ணரசி முடியில் பட்டினியில் 40 நாட்கள் வாடி இறந்தார். அதோடு நாயக்கர் சாம்ராஜ்யம் மறையத் தொடங்கியது. 1732 இல் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தா சாகிப் அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது.மங்கம்மாளின் ஆட்சித்திறமை, நிர்வாகம், மக்கள் பணி எல்லாம் பின்னர் வந்த எவராலும் நிறைவு செய்யப்படாமல், இன்று வரை வெற்றிடமாகவே உள்ளது. அந்த சமூகம் சார்ந்த சிந்தனையில் ஆட்சி சென்றிருந்தால் கூட மதுரையும், திருச்சியுமாவது முன்னேறியிருக்கும்.


சில ஸ்வாரயங்கள் (சில புத்தகத்தில் நேரடியாக சொல்லப்படவில்லை ) -

** திருவிதாங்கூர் போர், மைசூர் போர், இராமாநாதபுரம் முற்றுகை என சில வெற்றிகளை தளவாய் நரசிம்மரையா மூலம் பெற்றார். நம்ப கதை மாதிரி தான். எங்கனாலும் நல்ல டீம் லீட் வேணும். இல்ல ப்ராஜெக்ட் பிரச்சனை தான்.
** முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது, அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னர், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார். அச்செருப்புக்கு எல்லாரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரமிக்க முத்துவீரப்பர் அந்தச் செருப்பைத் தன் காலில் அணிந்து கொண்டு “உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?” எனக் கேட்டார்.
** முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் பிரச்சனைகளை திறம்பட தாயும், மகனும் தீர்த்து வைத்தனர்.
** சௌராட்டிர மக்கள் மதுரையில் நிறைய இருந்தனர். ஒரு பிரச்சனையில் ஒரு குழு அமைத்து, அவர்களும் ஆவணி அவிட்டம் செய்யலாம், பிராமணர்கள் போல் பூணல் அணிய ஒரு சட்டம் போட்டார். அதுபற்றி தெலுங்கில் சாசனம் உள்ளது.
** மைசூர் இராஜ சிக்கதேவர் காவேரியில் தண்ணீர் தர மறுத்தலால்,பெரும் படை திரட்டி தளவாய் மூலம் காவேரி அணையை உடைக்க திட்டமிட்டு பாதி தூரம் சென்றுவிட்டார். அதற்குள் மழை அதிகமாகி அணை தன்னாலேயே உடைந்தது.
** கோவில் பணிகள் அளவில்லாது செய்தார். பெரு வெள்ளத்தின் போது, ஒரு நாள் கனவில் கொள்ளிடத்தில் தாம் புதைந்துள்ளதாக இறைவன் இவர் கனவில் கூற, அப்போது காவேரி வெள்ளம் வந்தது. மக்களுக்கு உதவி செய்து, ஒரு இடத்தில் தோண்ட அங்கு கிடைத்த சிலைகளை வைத்து கோவில் கட்டினார்.
** ஒருமுறை, தன்னை மறந்து இடது கையால் வெற்றிலை போட, அதனால் ஆட்சிக்கு தீங்கு வரக்கூடாது என்று எண்ணி, பல திருக்கோவில்களுக்கு தர்மங்கள் செய்தார். ஏழு ஏகாதசி கிராமங்கள் அமைத்து அதில் பிராமணர்களைக் குடிஅமர்த்தினார். திரளி, நதிக்குடி, அச்சன்தவிர்த்தான் இன்னும் நான்கு கிராமங்கள் என்று ஒரு செவி வழி செய்தியும் உள்ளது. அங்கு தெலுங்கு பேசும் வைஷ்ணவர்களைக் குடிஅமர்த்தினார்... இது போல் காரணத்தால், உ.வே.சா. பிறந்த உத்தமதானபுரம் தஞ்சை மன்னரால் உருவாக்கப்பட்டது. ஒரு இடது கை வெற்றிலைக்கே இப்படி.. இப்போது ஒன்னும் சொல்றதுக்கில்லை.
** அன்ன சத்திரங்கள் கட்டினார். மனிதர்களுக்கு மட்டுமில்ல.. சாலை வழி நெடுக நீர் தொட்டிகள் அமைத்து, ஆடு-மாடு போன்ற உயிரினங்களுக்கும் பசியாற்றினார். இன்றும் மங்கம்மாள் சத்திரம் மதுரையில் உள்ளது.. ஆனால் சத்திரமாக இல்லை, வணிக நிறுவனங்கள், அரசு அலுவலங்கள் இருக்கு. பொது மக்களுக்காக குடிநீர் ஊரணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச்செய்தார்.
** ஒருமுறை, இராணியின் உறவினர் மரண தண்டனை தவறு செய்ய, நீதிபதிகள் செய்வதறியாது திகைத்தபோது, மங்கம்மாள் உரிய தீர்ப்பு வழங்கினார் உறவினர் என்றும் பாராமல்.
**மங்கம்மாள் மதுரை சித்திரை திருவிழாவை தவறவிட்டதில்லை, அழகர் வைகை வருவது உட்பட. திருவிழாவின் ஒரு நாள் மங்கம்மாள் செங்கோல் மீனாக்ஷி முன் வைத்து வழிபடுவார். அது இன்றும் நடைமுறையில் உள்ளது.
**கடைசி வரை கிழவன் சேதுபதி சூப்பர் ஹீரோவாகி, வெல்ல முடியாதவராக இருந்தார். மதுரையையும் பிடித்தார் மங்கம்மாள் மறைவுக்குப்பின்.
** அவர் ஆட்சிக்கு உட்பட்ட இடம் தவிர, எங்கும் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சேதுபதியின் பங்காளி-தடியத்தேவர் மூன்று மனைவியர்களை விவகாரத்து செய்துவிட்டு கிறிஸ்துவமதம் மாறினார். இது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி, தாக்குதல் அதிகமானது. மற்ற இடங்களில் நிறைய மத மாற்றங்கள், ஆசையினால் நடைபெற்றன. மங்கம்மாள் அவற்றை ஆதரிக்காமலும், எதிர்க்காமல் அனைவரையும் ஒருகுடி மக்களாகப் பார்த்தார்.
** திவ்ய பிரபந்தங்களுக்கும், அரங்கனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். இறக்கும் தருவாயில் இவர் மகன் கூட திருவரங்க வைஷ்ணவரின் குரலில் 'துளங்கு நீள்முடி' பாசுரம் கேட்டதாக புத்தகம் சொல்கிறது.
** இன்றும் மதுரை பக்கம் சொல்லப்படும் பல செவிவழிச் செய்திகளுக்கும், கர்ண பரம்பரை கதைகளுக்கும் காரணமாகி இருந்தாலும், சிறந்த நிர்வாகியாகவும், ஆட்சியாளராகவும் சரித்திரத்தில் இடம் பெற்றார் மங்கம்மாள். சோழவந்தான் அருகில் அணைப்பட்டி என்ற கிராமத்தில் வைகை பாய்ந்து ஓடும் ஆற்றங்கரையில், பாலம் கட்ட முயல, பாலம் பல முறை இடிந்து போனது. மங்கம்மாள் அங்கு சென்று 3 நாள் உண்ணாமல் விரதம் இருந்தார். கனவில் ஆஞ்சநேயர் வந்து கோவில் கட்டக் சொல்ல, அங்கு ஒரு கோவில் கட்டினார். இது இன்றும் உள்ளது. நாங்கள் சென்ற போது கேட்ட கதை. இவை போன்ற பல செய்திகள் மக்களின் வாழ்வில் ஒன்றிக் கலந்துள்ளது. மக்கள் மனதில் என்றும் நிலைத்து நின்றார் மதுரை மீனாக்ஷி அம்மனைப்போல்.


Image may contain: 1 person


Image may contain: 1 person


Image may contain: one or more people and people standing

Image may contain: 1 person, standing