Sunday, August 19, 2018

நூல் (புத்தகம்) - விற்பனை - 2018

ஒருமுறை தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பேசுவதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் நடக்கவிருந்த இடம் ஓர் அரங்கத்தின் மாடியில் என்பதால் படி ஏறித்தான் செல்ல வேண்டும். உ.வே.சா.வை மாடிக்கு அழைத்துச் செல்ல ஒரு பதின்ம வயது சிறுவனை ஏற்பாடு செய்திருந்தனர். சிறுவன் கையைப் பிடித்த படி, ஒவ்வொரு படி ஏறும்போதும் "படிங்க தாத்தா, படிங்க தாத்தா...' என்று சொல்லிச் சொல்லி அழைத்துச் சென்றான். கூட்டத்தில் பேசும்போது உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள், "நான் நிறையப் படித்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தக் கூட்ட அறைக்குக் கூட்டி வந்த சிறுவன், என்னைப் பார்த்துப் "படிங்க தாத்தா... படிங்க தாத்தா...' என்று கூறிக்கொண்டே வந்தது, நான் இன்னும் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது..'' என்று, நயமாக உரை நிகழ்த்தினார். (முன்னொரு முறை தூர்தர்ஷன்ல் பார்த்த நாடகத்தில் கொஞ்சம் வேறுமாதிரியிருந்தது.)

ஆம்.. வாழ்க்கையே ஒரு புத்தகம் தான். தினமும் எத்தனையோ படிப்புகள். ஆனாலும் தேடிப்பிடித்து படிப்பது தனி அனுபவம் தான். இனி வழக்கம் போல் நம்ப கதைக்கு வருவோம்.. இந்த ஐடி-யில், ஆரம்பிக்கறது ஒருத்தர், மாட்டுவது இன்னொருத்தர் என்பது எழுதப்படாத விதி.. யாராலும் மற்ற முடியாது. யாரோ எதுக்கோ ஒரு எஸ்டிமேஷன் போட, வழக்கம் போல் இதை முடிக்க போதிய ஆட்கள் இல்லாமல் இரவு-பகல் (கவனிக்க) பாராமல் 'உழைக்க' தள்ளப்படுவோம்.. வார நாட்களும். இப்போது அப்படி ஒரு நிலையில் ஒரு ப்ராஜெக்ட் ஓடிக்கொண்டிருக்கிறது. இது இயங்கும் 2-3 மாதத்திற்குள் 3-4 பேர் வேலையைவிட்டுப் போக சிக்கல் சிலந்திவலையானது. எதிர்பார்ப்பது போல் ஆன்சைட்ல் தெலுங்கில் பேசும் ஒருவர்.. மேற்கொண்டு விவரிக்க வேண்டாம். கருணாநிதி, வாஜ்பாயி எல்லாம் கற்றுக்கொடுத்து போனது 'ஓய்வில்லாமல் உழைக்கணும்' ஆம், அவர்கள் இறந்த விடுமுறைநாளிலும் 'கனெக்ட்' செய்திருந்தோம். சென்னை முழுதும் மழை பெய்தாலும் 'என்ன மழையா? எப்போ பேஞ்சது?' என்று அலுவலக வாசல் தண்ணீர் பாத்து தான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.. பெரும்பாலும் இந்தமுறை நள்ளிரவு மழைஇல்லாததால், உணர முடியவில்லை. ஒரு நாள்  ப்ராஜெக்ட் பில்லிங் நிவாரணமாகத் தருகிறோம்ன்னு ஒரு வார்த்தைக்காவது சொல்லலாம் (அதற்குக்காரணம் காட்டி நம் சம்பளத்தில் கைவைத்தாலும் ஆச்சர்யமில்லை). கேரளா வெள்ளத்திற்கும் நம்மிடம் தான் பணம் கேட்டார்கள் அலுவலகத்தில் (கட்டாயமில்லை). இது தான் பிசினஸ். இது போலத் தான் இந்த புத்தக விற்பனையும்.

மன அழுத்தம் அதிகமாகிக்கொண்டே போக, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்ன்னு 'புத்தகக் கண்காட்சி' போனேன். வழக்கம் போல் வந்தியத்தேவன் தான் ஆக்கிரமித்திருந்தான். 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய். ஆனந்த பூர்த்தியாகி. அருளொடு நிறைந்ததெது' என்று தாயுமானவர் பாடியது போல, எங்கு புத்தகம் விற்றாலும் அங்கு கல்கி இல்லாம இருந்தா அது பில்லிங் சப்மிட் பண்ணாத ப்ராஜெக்ட் மாதிரி தான். இந்த முறை 'பொன்னியின் செல்வன்' சிறுவர்களுக்கான காமிக் என்று ஒரு கடை இருந்தது. அவ்வளவு பெரிய புதினத்தை எப்படி தர முடியும், அதுவும் ஆங்கிலத்தில்..!சிறு பகுதியை எடுத்திருந்தார்கள் போலும்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி நிறைய புத்தகம் இருந்தது. ஒவ்வொரு கடையிலும் அதன் அருகில் கண்ணதாசனின் 'மன வாசம்' இருந்தது.. தெரிந்து தான் வைத்தார்களான்னு தெரியல :). சுஜாதா புத்தகம் குறைவு எனலாம், ஸ்ரீரங்கத்து தேவதைகள் இல்லை.. அம்பேத்கார், சேகுவாரா, வீரப்பன், பிரபாகரன், இன்ன பிற சீன, மேற்கு-கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவரின் உருவம் போட்ட புத்தகம் நிறைய இருந்தது. வானதி, செண்பகம் மற்றும் சில இதற்க்கு விதிவிலக்கு. குழந்தைகளுக்கு என்று நிறைய கடைகள் இருந்தது. கண்டிப்பாக கிரெடிட் கார்டு இல்லாமல் அந்த கடைக்குள் போக முடியாது..

கோயம்பேடு, வைகை எக்ஸ்பிரஸ்களில் விற்கும் பத்து ரூபாய் புத்தகம் தாராளமாய் நிறைய கடைகளில் இருந்தது.பீர்பால், தெனாலிராமன்,  சித்த மருத்துவம், வசியம், நாடி, கட்டம், கோலம், 'தயிர் சாதம் செய்வது எப்படி' இத்யாதி  என பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது. அடுத்த தலைமுறையை அறிவு சார்ந்த தலைமுறையாக உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு தான் இது போன்ற கண்காட்சி-விற்பனை இருக்கவேண்டும். தமிழாராய்ச்சி கழகம் இருந்தது. அங்கும் ஏறத்தாழ இதே நிலை தான். சாண்டில்யன் கொஞ்சம் குறைவு இம்முறை.உடையார் நிறைய இருந்தது.புறநானூறு, அகநானூறு இன்ன பிற இலக்கிய புத்தகங்கள் பார்க்க முடிந்தது..மருந்துக்குக்கூட யாரும் எடுத்துக் பார்க்கவில்லை. திருவரங்கன் உலா கணிசமாயிருந்தது. உ.வே. சா  'என் சரித்திரம்' இம்முறை 400 முதல் 500 வரை என்று விற்றார்கள். 'பாண்டியர்கள் வரலாறு' (சதாசிவ பண்டாரத்தார் - 1956) என்ற ஒரு புத்தகம் மட்டும் வாங்கினேன். 10% கழிவு இருந்தது

கிரி ட்ரடேர்ஸ்ல் கூட பொன்னியின் செல்வன் விற்றார்கள். மகிழ்ச்சி..! தினமலர் ஸ்டாலில் சொன்னது நான் தேடிய புத்தகம் அவர்களிடம் இல்லாத போது - 'சார் நாங்க எல்லா புத்தகத்துக்கும் சைட்ல் விளம்பரம் போடுவோம்.. ஏன், நீங்களே நாளைக்கு எழுதுங்க, அதுக்கும் நாங்க போடுவோம்'.. உண்மை தான்.. நாம் தான் தேட வேண்டும். தேடுதல் தர வேண்டும் நல்லவற்றை (தேடுவதும் நல்லதாய் அமைய வேண்டும்:)), உ.வே. சா போல்..!

* அமைதியான சூழலில் இது போல் இருக்க வேண்டும். அப்போது தான் புத்தகம் வாங்க-படிக்க முடியும்.. நேற்று ஏதோ இசை என்று, ஓரு மணி நேரம் காது கிழிந்தது தான் மிச்சம் .
* பட்டிமன்றம்-நாடகம் வைக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அதுவும் நடக்கிறது..  முடிந்தால் நல்ல பேச்சாளர்களைக் கொண்டு, அவர்களை படித்த புத்தகம் பற்றி பேசச் சொல்லலாம்..
* 'நூல்' என்று பெயர் இருப்பது தப்பாகிவிட்டது.. புத்தக விலை, 'பட்டு நூல்' அளவிற்குப் போய்க்கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.. இல்லையேல் பிரிண்டெட் காப்பி வாங்குவதற்கு பிரின்டிங் மெஷினே வாங்கிவிடலாம்.
* நாம் திரும்ப வரக்கூடாது என்பது போல் அவர்களே போர்டு வைத்துள்ளனர் - 'நன்றி மீண்டும் வருகை'. (தமிழன்டா)..
* எதிர்பார்த்தது போல் கரும்புச் சாறு, டெல்லி அப்பளம், ஊட்டி ட்ரை ப்ரூட்ஸ், பஜ்ஜிக் கடை எல்லாம் கூட்டம் நிரம்பியிருந்தது.. 'செவிக்குணவு இல்லாத போது.. ' இத்யாதி..

--கிரி, சென்னை; 03-ஆவணி..